வாழும் தமிழ்-2013 போட்டிகளில் வான்பொய்த்தால் என்ற தலைப்பில் கவிதைப்போட்டி நடைபெற்றது. அவற்றில் பரிசு பெற்ற கவிதைகள் இங்கே...
முதல் பரிசு பெற்ற செ. ராஜ்குமாரின் கவிதை
வான்பொய்த்தால்
கங்கை நதி அருகினிலே
செழித்த வயலினிலே
கதிர் அறுக்கும் உழவனைக் கண்டேன்
ஆற்றங் கரையினிலே
அரசமர நிழலினிலே
குமரிப்பெண்கள் குளித்திடக் கண்டேன்
ஊரின் நடுவினிலே
ஆலமர நிலழினிலே
ஊரார் கூடி மகிழ்ந்திடக் கண்டேன்
ஓங்கி உயர்ந்த மரங்களும்
ஊரை நிறைக்கும் வளங்களும்
மங்களமாய் செழித்திட கண்டேன்
திடிரென ஓர் சத்தம்
கனவு கலைந்து எழுந்தேன்
என் கண்ணில் மழைத் தூறல் துவங்கியது
வான் பொய்த்தால்...?
உணவளிக்கும் உழவர்கு
தாயின்றி போனால்?
ஓங்கி உயர்ந்த காடுகளுக்கு
தோழனின்றி போனால்
அவ்வப்போது வந்துபோகும்
சொந்தமின்றி போனால்?
வான் பொய்த்தால்..?
உழவர்கள் கண்ணீரில்
ஏர் பூட்டலாம்
மழலையர் பன்னீரில்
குளிக்கலாம்
காடுகள் மறைய
வீடுகள் கட்டலாம்
குடிக்க நீரின்றி
கும்மாளம் அடிக்கலாம்
இவையாவும் நிச்சயம் நடக்கும்..
வான் பொய்த்தால்..?
வான் பொய்த்தால்..?
நாட்டின் பெரும்பாலான விவசாயிகள்
தொழில்நுட்பப் பூங்காவில் இணைந்தனர்.
மீதமுள்ள விவசாயிகள்
தூக்குக் கயிறு வாங்கவும் விஷம் வாங்கவும்
வங்கிகடன் வாங்கினர்.
விவசாய நிலங்கள் வீடுகளாகவும்
தொழிலகங்களாகவும் மாறின.
இவையாவும் நிச்சயம் நடந்திராது
மழை பொழிந்திருந்தால்...
இந்த தகவலை நாட்டின் மக்களுக்கு
அறிவித்தார் பிரதமர்...
இரண்டாம் பரிசு பெற்ற விஜயகுமாரின் கவிதை
வான் பொய்த்தால்!
தோகைவிரித்தாடும் மயில்களின் நடனம்
கல்லுக்கடியில் கணைக்கும் தவளைகள்
தரை தொடாது பறக்கும் தும்பிகள்
தேன் தெரிக்க ரிங்காரமிடும் வண்டுகள்
இருப்பிடம் தேடி அணிவகுக்கும்
இரை சுமக்கும் எறும்புகள்
கூடுகள் நோக்கி பறக்கும் பறவைகள்
தேக தாகம் தீர்க்க துடிக்கும் மண்
இலை இழந்த மரங்களின் ஆரவார வரவேற்பு
வாடிய பூச்செடிகளின் தேன் கசிவு
சூடானதும் சுகந்தம் பரப்பும் தென்றல்
கருவுற துடிக்கும் விதைகள்
வான் மேகத்தை உற்று நோக்கும்
உழைக்கும் உழவர்களின் கண்கள்
ஆடை இழந்த மொட்டை மாடி கொடிக் கம்பங்கள்
நாணத்தால் மூடின வீட்டு ஜன்னல்கள்
தாயின் கதகதப்பை ஏற்க்க மறுக்கும் சேய்
மூலையில் முடங்கிய குடை பூவின்
மொட்டுகள் விரிய காத்திருக்க... இவையெல்லாம்
உன் வருகையின் முன் பதிவுகள்.
கோடை விடுமுறை முடிந்தும்
நீ வராதது ஏனோ?
உயிர்களுக்கெல்லாம் விருந்தளிக்கும் மழையே!
வண்ணமிகு பூக்களில் நுகர்ந்ததில்லை!
வாசம் பொங்கும் திரவியத்தில் கண்டதில்லை!
நீ வந்த சில நொடிகளில்,
மனதை ஈர்க்கும் மண் வாசனையை!